செய்திகள்
வந்தவாசியில் மின்னல் தாக்கி படுகாயமடைந்த மூதாட்டி பலி
வந்தவாசியில் மின்னல் தாக்கி படுகாயமடைந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:
கஜா புயல் தாக்கம் காரணமாக வந்தவாசி பகுதியில் கடந்த 15, 16-ந்தேதிகளில் பலத்த மழை பெய்தது. கடந்த 16-ந் தேதி காலை வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பேபிஅம்மாள் (வயது 75) என்பவர் வீட்டின் முன்பகுதியில் அமர்ந்திருந்த போது திடீரென மின்னல் தாக்கியதில் பேபி எம்மால் படுகாயம் அடைந்தார்.
மேலும் வீட்டின் முன்பக்க கதவு மற்றும் ஜன்னல் சுக்குநூறாக உடைந்து சேதமானது. ஆபத்தான நிலையில் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பேபி அம்மாள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு பேபியம்மாள் பரிதாபமாக இறந்தார். வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.