செய்திகள்

செல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர் கைது

Published On 2018-11-15 12:03 GMT   |   Update On 2018-11-15 12:03 GMT
நந்தியம் பாக்கம் அருகே ரெயில் பெட்டியின் வாசலில் நின்று பேசி கொண்டிருந்த பயணியின் செல்போனை பறிக்க சிறுவர்கள் கம்பால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
பொன்னேரி:

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் சித்தீஸ் வரதாஸ் (வயது 44). இவர் கடந்த வாரம் சென்னையில் வேலை தேடுவதற்காக ‘கொரமண்டல் எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் வந்து கொண்டு இருந்தார்.

கடந்த 9-ந் தேதி மாலை மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கம் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தது. சித்தீஸ்வரதாஸ் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டு செல்போனில் பேசினார்.

அந்த நேரத்தில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள் செல்போனை பறிப்பதற்காக நீண்ட கம்பால் சித்தீஸ் வரதாசை தாக்கினர்.

இதில் நிலைதடுமாறிய சித்தீஸ்வரதாஸ் செல்போனோடு ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். உடனே 2 சிறுவர்களும் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த சித்தீஸ்வரதாசுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சித்தீஸ்வரதாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து பயணியை தாக்கி செல்போன் பறித்ததாக நந்தியம்பாக்கம், பொன்னேரி பகுதியை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்களை கைது செய்து இருந்தனர்.

தற்போது சித்தீஸ்வரதாஸ் இறந்ததையடுத்து கைதான 2 சிறுவர்கள் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு உள்ளது. #tamilnews
Tags:    

Similar News