தேவதானப்பட்டி அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
தேனி:
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி தெற்குகாலனிபகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாண்டியம்மாள்(55).
சில்வார்பட்டி தெற்குகாலனி பகுதியை சேர்ந்தவர் வீரமணி(33). இவர் சென்னை பல்லவன் போக்குவரத்துகழகத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீரமணி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பஸ்சை ஓட்டிய டிரைவர் மாயாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே வீரமணி காட்டுரோடு பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி விட்டார். பிறகு மாயாண்டியின் மனைவி பாண்டியம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற வீரமணி அவரது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை முன்விரோதமாக வைத்துக்கொண்டு பாண்டியம்மாளை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாயாண்டி மனைவி பாண்டியம்மாள் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வீரமணியை வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.