செய்திகள்

களக்காடு அருகே தையல்காரரை தலை துண்டித்து கொன்ற அண்ணன்-தம்பி கோர்ட்டில் சரண்

Published On 2018-11-12 12:28 GMT   |   Update On 2018-11-12 12:28 GMT
களக்காடு அருகே தையல்காரரை தலை துண்டித்து கொன்ற வழக்கில் அண்ணன், தம்பி ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
ஆலங்குளம்:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் ஆல்பர்ட் செல்வகுமார்(வயது40). தையல் தொழிலாளியான இவர் வள்ளியூரில் ஒரு தையல் கடையில் வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 6-ந்தேதி தனது ஊரில் நின்றபோது அதே பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரிடம் மணி என்பவரது மகன்கள் பொன்இசக்கி(27), இசக்கி முத்து(23) ஆகியோர் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தனர். அதற்கு மாயக் கிருஷ்ணன் மறுத்தார். அப்போது ஆல்பர்ட் செல்வகுமார், மாயகிருஷ்ணனுக்கு ஆதரவாக பேசி பொன் இசக்கியையும், இசக்கி முத்தையும் கண்டித்தார்.

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் அன்று இரவில் ஆல்பர்ட் செல்வகுமாரின் வீட்டுக்கு பொன் இசக்கி, இசக்கிமுத்து ஆகிய இருவரும் வந்தனர். அவர்கள் மோட்டார்சைக்கிளில் ஆல்பர்ட் செல்வகுமாரை அழைத்துச்சென்றனர். அதன் பின்னர் வெகு நேரமாகியும் ஆல்பர்ட் செல்வகுமார் வீடு திரும்பி வரவில்லை.

இதனால் ஆல்பர்ட் செல்வகுமாரை அவரது வீட்டில் தேடினார்கள். இதனிடையே அப்பகுதியில் உள்ள பச்சையாறு கரையில் ஆல்பர்ட் செல்வகுமார் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தது மறுநாள் (7-ந்தேதி) கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பொன் இசக்கியும், இசக்கி முத்துவும் சேர்ந்து ஆல்பர்ட் செல்வகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தேடினர். ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

ஆகவே அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வந்தனர். பொன்இசக்கி தூத்துக்குடியில் டிரைவராக வேலை பார்த்ததால் தூத்துக்குடியில் பதுங்கி இருக்கலாம் என்று கருதி தனிப்படை போலீசார் அங்கும் சென்று தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பொன் இசக்கி, அவரது தம்பி இசக்கி முத்து ஆகிய இருவரும் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பிச்சைராஜன் முன்னிலையில் இன்று சரண் அடைந்தனர். #tamilnews
Tags:    

Similar News