செய்திகள்

கோவை அருகே டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி ரூ.3½ லட்சம் வழிப்பறி

Published On 2018-11-12 10:07 GMT   |   Update On 2018-11-12 10:07 GMT
கோவை அருகே டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி ரூ.3½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:

கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் காட்டுப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.

இந்த கடையில் திருப்பூர் பெதப்பம்பட்டியை சேர்ந்த வேலுசாமி (வயது36), தர்மபுரியை சேர்ந்த ஜெகதீஸ் (38) ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் அப்பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று இரவு பணி முடிந்ததும் கடையில் வசூலான ரூ.3½ லட்சத்தை எடுத்துக் கொண்டு மொபட்டில் புறப்பட்டனர்.

நள்ளிரவு 11 மணி அளவில் சூலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இவர்களை வழி மறித்து இருவரின் கண்ணிலும் மிளகாய் பொடியை தூவினர். இதனால் ஜெகதீஸ், வேலுசாமி ஆகியோர் நிலை குலைந்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர்.

பணத்தை பறிகொடுக்காமல் இருக்க இருவரும் பையை இறுக்கிப் பிடித்தனர். இதனால் ஆவேசமடைந்த கும்பல் கத்தியால் வேலுசாமி, ஜெகதீசை குத்தியது. இதில் அவர்கள் காயம் அடைந்து கீழே விழுந்தனர். உடனே பணத்தை பறித்துக் கொண்டு கும்பல் தப்பி ஓடி விட்டது. அவ்வழியாக வந்தவர்கள் வேலுசாமி, ஜெகதீசை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவஇடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேரும் லுங்கி, பனியன் அணிந்து வந்துள்ளனர். டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் சூப்பர்வைசர் நேற்று திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டார். எனவே விற்பனையாளர்கள் இருவரும் வசூல் தொகையுடன் சென்ற போது சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளையர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News