செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்கிறது - கேரளா காங்கிரஸ் தலைவர்

Published On 2018-11-09 11:10 GMT   |   Update On 2018-11-09 11:10 GMT
சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்கிறது என்று கேரளா காங்கிரஸ் தலைவர் சென்னிதாலா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Sabarimala #SabarimalaTemple

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்திற்கு கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சென்னிதாலா வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு 99 சதவீத மக்களிடையே ஆதரவு இல்லை, இதற்காக உச்சநீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றினை பரிசீலிக்கும் போது தற்போதைய நிலவரத்தினை உச்சநீதிமன்றம் கணக்கில் கொண்டுதான் ஆக வேண்டும்.

அதன்படி உச்சநீதி மன்றத்தில் பக்தர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கின்றோம்.


இந்த வழக்கினை வாதாட மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான அபிஷேக் சிங்வியை கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது. ஜாதி மத பேதமின்றி அனைவரும் சபரிமலைக்கு செல்கின்றனர். பா.ஜ.க.மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சபரிமலை விவகாரத்தில் அரசியல் செய்கின்றது.

சபரிமலை விவகாரத்தினை கையாள்வதில் கேரள கம்யூனிஸ்ட் அரசு தோல்வியினை தழுவியுள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் வரும் இடத்தினில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையினில் நிலையை கையாள அரசு தவறி விட்டது.

கம்யூனிஸ்ட் அரசின் இச்செயலால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாக்கி உள்ளனர். கேரள அரசு தனது நடவடிக்கைகளால் சபரிமலை புனித யாத்திரையின் முக்கியத்துவத்தினை குறைத்து விட்டது. இது தவறான செயலாகும்.

இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #SabarimalaTemple

Tags:    

Similar News