செய்திகள்

கல்வி கடன் கட்டமுடியாததால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை முயற்சி- உருக்கமான கடிதம் சிக்கியது

Published On 2018-11-07 10:58 GMT   |   Update On 2018-11-07 10:58 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்வி கடன் கட்ட முடியாததால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் படிக்கும் போது குமாரபாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் கல்வி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. போதிய வருமானம் இல்லாததால் பிரசாத் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி சார்பில் நடந்த சிறப்பு கடன் தீர்ப்பு முகாமில் வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 846-ஐ திருப்பி செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் பிரசாத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதனால் மன வேதனை அடைந்த பிரசாத் நேற்று மாலை பல்லக்காபாளையம் பெரியகாப்ரா மலை பகுதியில் சேலையால் தூக்கில் தொங்கினார். அப்போது அங்கு ஆடு மேய்த்து கொண்டு இருந்த பெண் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பிரசாத்தை காப்பாற்றினார்.

பிரசாத் தற்கொலைக்கு முயன்ற இடத்தில் உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர் என் மரணத்துக்கு பிறகாவது என்னை போல் கல்வி கடன் வாங்கி வங்கி நிர்வாகத்தால் மிரட்டப்படும் நிலை மாறி நல்ல தீர்வு கிடைக்கட்டும் என்று எழுதி இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News