செய்திகள்

விருதுநகரில் பட்டாசு வெடித்ததில் ஓட்டல் எரிந்து நாசம் - மேலும் 3 இடங்களில் தீ விபத்து

Published On 2018-11-07 05:37 GMT   |   Update On 2018-11-07 05:37 GMT
விருதுநகரில் பட்டாசு வெடித்ததில் ஓட்டல் உள்பட 4 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. #Diwali
விருதுநகர்:

விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் கிருஷ்ண மூர்த்தி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று பண்டிகை என்பதால் ஓட்டல் மூடப்பட்டு இருந்தது. ஓட்டல் பின்புறம் கிருஷ்ணமூர்த்தி, விறகுகளை வைத்திருந்தார்.

நேற்று இரவுஅந்த பகுதியில் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு விறகு மீது விழுந்தது. சிறிது நேரத்தில் தீ பிடித்து விறகு எரிந்தது. மேலும் அருகில் இருந்த ஓட்டலுக்கும் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு நிலைய அதிகாரி குமரேசன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் போராடி அவர்கள், தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஓட்டலின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் விருதுநகரில் ஒருமணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

விருதுநகர் வாடியான் தெருவில் வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு பழைய அட்டை, பேப்பர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று பட்டாசு வெடித்து விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேப்பர்கள், அட்டைகள் எரிந்து நாசமானது.

இதேபோல் விருதுநகர் ஆணைக்குழாய் தெருவில் உள்ள ஆதீஸ்வரி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கிட்டங்கியிலும், சிவன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் வைக்கும் இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. #Diwali

Tags:    

Similar News