செய்திகள்

கடலூரில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை

Published On 2018-11-01 10:56 GMT   |   Update On 2018-11-01 10:56 GMT
கடலூரில் நேற்று இரவு 11 மணிக்கு நகர பகுதியில் லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு கடலூர் நகர பகுதியில் லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இடியுடன் மழை பெய்ததால் நகரின் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் மழைநீர் செல்ல போதிய வசதி இல்லாததால் மழைநீரும், சாக்கடை நீரும் சேர்ந்து தெப்பக்குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் துர் நாற்றம் வீசுகிறது. சேறும்- சகதியுமாக காட்சி அளித்தது.

கடலூர் நகர் பகுதியில் இன்று காலையும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

சிதம்பரம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் போன்ற இடங்களில் இன்று காலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந் தனர். அவர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தும் பள்ளி- கல்லூரிக்கு சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, களமருதூர், சேந்த நாடு போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

அதுபோல மரக்காணம் அதனை சுற்று பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது.

Tags:    

Similar News