செய்திகள்

அரக்கோணம் அருகே வாலிபர் அடித்து கொலை

Published On 2018-10-30 12:24 GMT   |   Update On 2018-10-30 12:24 GMT
அரக்கோணம் அருகே வாலிபர் அடித்துகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவரது மகன் சரவணன் (12). இச்சிறுவன், அதே பகுதியில் உள்ள இருளர் காலனியில் வசிக்கும் மேளம் அடிக்கும் தொழிலாளியான குட்டி (45) என்பவருடைய வீட்டின் அருகே நேற்று விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது, மேளம் அடிக்க கூடிய குச்சியை சிறுவன் எடுத்து விளையாடியபோது உடைந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த குட்டி, சிறுவனை சரமாரியாக அடித்து உதைத்தார். சிறுவனின் தந்தை ரவி, தாய் வன்னியம்மாள் (40) மற்றும் மருமகள் சோனியா (23), உறவினரான பாலன் என்கிற பால்ராஜ் (30) ஆகியோர் குட்டியிடம் தட்டிக்கேட்டனர்.

இவர்களையும், குட்டியின் தரப்பினர் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இதில் சிறுவனின் பெற்றோர், உறவினர் பால்ராஜ் உள்பட 4 பேரும்பலத்த காயமடைந்தனர். அப்பகுதி மக்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனின் பெற்றோர் உள்பட 3 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுதொடர்பாக, அரக்கோணம் தாலுகா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து மேளம் அடிக்கும் தொழிலாளி குட்டி மற்றும் அவருடைய உறவினர்கள் கோவிந்தராஜ் (25), அய்யப்பன் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட பால்ராஜ், கட்டிட வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1½ வயதில் பெண் குழந்தை உள்ளனர். சிறு வி‌ஷயத்திற்காக ஒருவரின் உயிரை பறித்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News