செய்திகள்

போதிய வருமானம் கிடைக்காததால் ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் தற்கொலை

Published On 2018-10-24 03:49 IST   |   Update On 2018-10-24 03:49:00 IST
போதிய வருமானம் கிடைக்காததால் ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் தற்கொலை
பூந்தமல்லி:

சென்னையை அடுத்த மதுரவாயல், கங்கா நகரை சேர்ந்தவர் நாகூர் கனி(வயது 44). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி சோபிதாபேகம். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சோபிதாபேகம் தனது பிள்ளைகளுடன் சென்று விட்டார். வீட்டில் நாகூர்கனி மட்டும் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து சோபிதா பேகம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது கணவர் தனது அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன நாகூர் கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்து விட்டதால் சரியான முறையில் வருமானம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் அவருக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த நாகூர் கனி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருவதாக மதுரவாயல் போலீசார் தெரிவித்தனர். 
Tags:    

Similar News