செய்திகள்

18 எம்.எல்.ஏக்களின் தொகுதி புறக்கணிப்பு - அரசை எதிர்த்து தினகரன் போராட்டம் அறிவிப்பு

Published On 2018-10-21 08:39 GMT   |   Update On 2018-10-21 08:39 GMT
அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதி புறக்கணிப்படுவதால் அரசை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். #TTVDhinakaran
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று அசோக் நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

இவர்களுடன் தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக உள்ள கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோரும் வந்தனர். இவர்கள் அனைவருடனும் தினகரன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் அரசின் திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும் அரசின் சலுகைகள் மக்களுக்கு சென்றடையவில்லை என்ற ஆதங்கத்தையும் தினகரனிடம் தெரிவித்தனர்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இந்த மாத இறுதியில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாதகமான தீர்ப்பு வந்தால் என்ன நிலைப்பாட்டை எடுப்பது, எதிரான தீர்ப்பு வந்தால் 18 பேரும் தேர்தலை சந்திப்பதா? அல்லது அப்பீல் செய்வதா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் - புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவதற்கு என்னென்ன வியூகம் வகுக்க வேண்டும் என்பது குறித்தும் தினகரன் நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டறிந்தார்.

தேர்தலுக்கு இப்போதே ஆயத்தப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தினகரன் கேட்டுக் கொண்டார்.

ஆலோசனைக்கு பிறகு டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் வஞ்சிக்கப்படுகிறது. அங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நிக்க வழக்கு எங்களுக்கு சாதகமாக வரும். 90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.

கூட்டணி தொடர்பாக யாருடனும் மறைமுகமாக பேசவில்லை. மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.



அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதே எங்களது நோக்கம். எங்களை பார்த்து பயப்படுவதால்தான் மேடை மேடையாக விமர்சிக்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும். அதில் அ.தி.மு.க.வினர் டெபாசிட் இழப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran

Tags:    

Similar News