செய்திகள்
திருவள்ளூர் அருகே போலீஸ் போல் நடித்து விவசாயிடம் பணம் பறிப்பு
திருவள்ளூர் அருகே போலீஸ் போல் நடித்து விவசாயிடம் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கம்மவார் பாளையத்தை சேர்ந்தவர் நீலமேகம். விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் மேல் நல்லாந்தூர் வழியாக வந்தார்.
அங்கு போக்குவரத்து போலீஸ் சீருடையில் நின்ற வாலிபர் ஒருவர் நீலமேகத்திடம் வாகனத்தின் ஆவணங்களை கொடுக்கும்படி கேட்டார்.
அப்போது போதிய ஆவணம் இல்லாததால் ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் கட்டவேண்டும் என்று கூறி பணத்தை வசூலித்தார். பின்னர் இதற்கான ரசீதை போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
இதுபற்றி நீலமேகம் திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் விசாரித்த போது மர்ம நபர் போலீஸ் போல் நடித்து பணம் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.