திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் பேரணி-மறியல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் திருவண்ணாமலையை சுற்றி உள்ள கிராமப்புறபகுதிகளில் இருந்து தான் வருகின்றனர். இவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் கல்லூரிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
ஏற்கனவே, இயக்கப்பட்டு வரும் ஒரு சில அரசு பஸ்களும் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை. மிக தாமதமாக பஸ்கள் வருவதால் அவதியடைகின்றனர். இது ஒருபுறம் இருக்க பஸ் பாஸ் இதுவரை வழங்கவில்லை என்று மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
முறையான பஸ் வசதி மற்றும் பஸ் பாஸ் கேட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை மாணவ-மாணவிகள் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரி வரை கோஷம் எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.