செய்திகள்

வடகிழக்கு பருவமழை தாமதம்- கேரளாவை மிரட்டிய லூபன் புயல் ஓமன் நோக்கி நகர்கிறது

Published On 2018-10-08 10:19 GMT   |   Update On 2018-10-08 10:19 GMT
கேரளாவை மிரட்டி வந்த லூபன் புயல் திசை மாறி ஓமன் கடற்பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. இதன்மூலம் கேரளாவை பயமுறுத்திய புயல் ஆபத்து நீங்கியது. #LubanCyclone
சென்னை:

வங்க கடலிலும், அரபிக்கடலிலும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக தீவிரம் அடைகிறது. தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் புயலாக மாறி வடமேற்கு திசையில் வடக்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதேபோல் கிழக்கு மத்திய மற்றும் தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ‘லூபன்’ புயலாக மாறியது. இது இன்று காலை ஓமன் நாட்டில் இருந்து 1,040 கி.மீ. தொலைவிலும், ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவில் இருந்து 920 கி.மீ. தொலைவிலும், மினிக்காய் தீவில் இருந்து 1,260 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 5 நாட்களில் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாட்டு கடற்கரையை அடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கேரளாவை பயமுறுத்திய புயல் ஆபத்து நீங்கியது.


இந்த நிலையில் குமரிக் கடல் பகுதியில் வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்பட்டது.

ஆனால் அரபிக்கடலிலும் வங்க கடலிலும் புயல் உருவாகி இருப்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை.

இந்த புயல்கள் மறைந்த பின்புதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #LubanCyclone
Tags:    

Similar News