செய்திகள்

ஆம்பூர் அருகே தொழிலாளி கொலையில் திருத்தணி வாலிபர் கைது

Published On 2018-10-05 05:51 GMT   |   Update On 2018-10-05 05:51 GMT
ஆம்பூர் அருகே தொழிலாளி கொலையில் திருத்தணி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே பாங்கிஷாப் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 44), இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் வீராங்குப்பம். இவருக்கு சுமதி, சித்ரா ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.

சுமதி வீராங்குப்பத்தில் வசித்து வருகிறார். சித்ரா பாங்கி ஷாப்பில் கணவருடன் வசித்து வந்தார். பார்த்தீபன் - சித்ரா தம்பதிக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

பார்த்தீபனின் அண்ணன் தீனதயாளன். இவர் வீராங்குப்பத்தில் வசித்து வருகிறார். தீனதயாளனின் மகள் வரலட்சுமியை திருத்தணியை சேர்ந்த காளிதாஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

காளிதாஸ் - வரலட்சுமிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. அப்போது பார்த்தீபன் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைப்பது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு வரலட்சுமி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக திருத்தணியில் இருந்து தனது சித்தப்பா வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. காளிதாஸ் தனது மனைவியை தேடி சின்னமாமனாரான பார்த்தீபன் வீட்டிற்கு வந்து தனது மனைவியை எங்கே என்று கேட்டு உள்ளார்.

அப்போது பார்த்தீபனுக்கும் காளிதாசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது காளிதாஸ், தனது சின்னமாமனாரை அடித்து உதைத்து கீழே தள்ளி, அருகில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் பார்த்தீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் காளிதாஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜ், ஆம்பூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தீபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காளிதாசை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News