விழுப்புரம் அருகே வாலிபர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ளது அத்தியூர் திருவாதி. இங்கு தென்பெண்ணையாறு ஓடுகிறது.
இந்த ஆற்றின் கரையோரம் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ஞானசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
ஆற்றங்கரையோரம் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்த்தனர். அந்த வாலிபர் பேண்ட்-சட்டை அணிந்துள்ளார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
மேலும் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறுயாராவது அவரை கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றார்களா? என்ற விவரம் தெரியவில்லை.
பின்னர் அந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோத னைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபரின் மர்மசாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.