செய்திகள்

ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு தைரியம் இல்லை- வரலட்சுமி மதுசூதனன்

Published On 2018-10-04 10:11 GMT   |   Update On 2018-10-04 10:11 GMT
ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை என்று வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
சென்னை:

செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து நகரச் செயலாளர் நரேந்திரன் தலைமையில் பழைய பஸ்நிலையம் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆப்பூர் வரலட்சுமி மதுசூதனன் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. குட்கா ஊழல், மின்வாரிய ஊழல், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறைகளில் மெகா ஊழல்கள் நடைபெறுகிறது.

இதை எதிர்க்கட்சியான தி.மு.க. சுட்டிக் காட்டினாலும், ஆளும் தரப்பினர் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து கிடக்கிறது. திட்டப்பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் பணம் இல்லை என்கிறார்கள்.

ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சருக்கு தைரியம் இல்லை. ஏனென்றால் அவர் மீதே லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் உள்ளது. என்னை மாட்டி விட்டால் உன்னை மாட்டி விடுவேன் என்று அமைச்சர்கள் மிரட்டுவதால் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தலைவர் மு.க.ஸ்டாலின் இவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தொழில் அதிபர் ஆப்பூர் மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ், ஒன்றிய செயலாளர் எம்.கே. தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News