செய்திகள்

முதலமைச்சருக்கு எதிராக நான் செயல்படவில்லை- கலைச்செல்வன் எம்எல்ஏ

Published On 2018-10-03 04:40 GMT   |   Update On 2018-10-03 04:40 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படவும் இல்லை பேசவும் இல்லை என்று கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #KalaiselvanMLA #ADMK #Kalaiselvan
விருத்தாசலம்:

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பிரபு (கள்ளக்குறிச்சி), ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் முதல்-அமைச்சருக்கு எதிராக பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதையொட்டி அந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து கலைச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சபாநாயகரிடமிருந்து எனக்கு நோட்டீஸ் வரவில்லை. நோட்டீஸ் வந்தபிறகு அதுகுறித்து நான் பதில் சொல்கிறேன். நான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தான். இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன்.

சின்னம்மா சசிகலா தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்.

இதுதொடர்பாகவும், இரட்டை இலை சின்னம் சம்பந்தமாகவும் கோர்ட்டில் வழக்கு உள்ளது. அதில் ஒரு முடிவு வரட்டும்.

நான் முதல்- அமைச்சருக்கு எதிராக செயல்படவில்லை. கூட்டத்தில் முதல்- அமைச்சருக்கும் எதிராகவும் நான் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


இதுதொடர்பாக பிரபு எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இதுவரை எந்த நோட்டீசும் எனக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதை சட்டப்படி எதிர் கொள்வேன். நான் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன்.

இந்தநிலையில் நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறேன் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.

இந்த ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் எண்ணம் எப்படி பட்டது என்று அனைவருக்கும் தெரிந்ததே.

இவ்வாறு அவர் கூறினார். #KalaiselvanMLA #ADMK #Kalaiselvan
Tags:    

Similar News