செய்திகள்

நெய்வேலியில் மதுகுடிக்க பணம் தர மறுத்த என்.எல்.சி. தொழிலாளிக்கு கத்திக்குத்து - வாலிபர் கைது

Published On 2018-09-26 16:24 IST   |   Update On 2018-09-26 16:24:00 IST
நெய்வேலியில் மதுகுடிக்க பணம் தர மறுத்த என்.எல்.சி. தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். #arrest

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் 13-வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுருளிராஜன் (வயது 46). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை சுருளிராஜன் நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது செடுத்தான்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 25) மற்றும் மேலக் குப்பம் பகுதியை சேர்ந்த தயாநிதி (26) ஆகிய 2 பேரும் அங்கு வந்தனர்.

அவர்கள் சுருளிராஜனிடம் மதுகுடிக்க பணம் கேட்டனர். சுருளிராஜன் தன்னிடம் பணம் இல்லை என கூறினர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுருளிராஜனை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ராஜ்குமாரும், தயாநிதியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த சுருளிராஜனை மீட்டு சிகிச்சைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் சுருளி ராஜன் புகார் செய்தார். புகாரின் பேரில் ராஜ்குமார், தயாநிதி ஆகிய 2 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் ரவீந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தார். தயா நிதியை வலைவீசி தேடிவருகிறார்.

Tags:    

Similar News