செய்திகள்
புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியபோது எடுத்தபடம்.

புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட தயாரா?- தினகரனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்

Published On 2018-09-26 04:53 GMT   |   Update On 2018-09-26 04:53 GMT
டி.டி.வி. தினகரனுக்கு துணிவு இருந்தால் சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டையில் நின்று வென்று காட்டட்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார். #ADMK #TNMinister #Vijayabaskar #TTVDhinakaran
புதுக்கோட்டை:

இலங்கை தமிழர் படுகொலையில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்று பேசியதாவது:-

இலங்கையில் இறுதி கட்ட போரின் போது அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்க அப்போதைய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்திய அரசு உதவி செய்ததாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். எனவே ஐ.நா. சபை தி.மு.க- காங்கிரஸ் கட்சிகளை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்.

மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்தே விலகவேண்டும்.

டி.டி.வி.தினகரன் பணத்தை கொண்டு எதையும் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார். பணத்தை கொடுத்து தான் கூட்டங்களை கூட்டி வருகிறார். தினகரனுக்கு துணிவு இருந்தால் சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டையில் நின்று பார்க்கட்டும். நானும் நிற்கிறேன். என்னை வென்று காட்டட்டும்.

பதவி வெறியில் தினகரன் உள்ளார். இரட்டை இலை இருக்கும் இடத்தில்தான் அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டன் இருப்பான். ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டவர் தினகரன். அவர் சசிகலாவின் விசுவாசி அல்ல. சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசியாக உள்ளார்.


ஆர்.கே.நகர் தேர்தலில் சசிகலா படத்தை போட வேண்டாம் என்று கூறியவர் அவர்தான். ஆர்.கே.நகர் தேர்தலில் அவருக்கு வேலை செய்ததால்தான் எனக்கு இவ்வளவு பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. நான் பிரச்சனைகளை கண்டு பயப்படவில்லை. அதை எதிர் கொண்டு வெற்றி பெறுவேன்.

அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வதற்கு தகுதி வேண்டும். அது தி.மு.க.விற்கு கிடையாது. தி.மு.க.வோடு நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார். யார் ஆட்சியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று நான் விவாதிக்க தயார். 10 ஆண்டு காலம் பதுங்கு குழியில் இருந்தவர் தான் தினகரன். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். தினகரன் வைத்துள்ள வி‌ஷமே அவருக்கு வினையாக முடியும்.

அ.தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் தி.மு.க.வாக இருந்தாலும் சரி, தினகரனாக இருந்தாலும் சரி. நெல்லிக்காய் மூட்டையை போன்று சிதறி ஓடி விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Vijayabaskar #TTVDhinakaran
Tags:    

Similar News