செய்திகள்
காயமடைந்த லட்சுமணன், கைதான ஆசைத்தம்பி

டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய தினகரன் கட்சி நிர்வாகி கைது

Published On 2018-09-19 09:23 GMT   |   Update On 2018-09-19 09:23 GMT
ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் மாமூல் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்திய தினகரன் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு காவல்சரகம் தொண்டராம்பட்டில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை இதற்கு முன்பு ஊருக்குள் இருந்துள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊருக்கு வெளியில் இந்த கடை கொண்டு செல்லப்பட்டது. இந்த கடையில் மேற்பார்வையாளராக ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த லட்சுமணன் என்பவர் உள்ளார்.

இந்த கடை ஊரை விட்டு சென்று விடக்கூடாது என்று ஊருக்கு வெளியில் கடை அமைய அமமுக ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராக உள்ள ஆசைத்தம்பி நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆசைத்தம்பி அடிக்கடி டாஸ்மாக் கடைக்கு சென்று இலவசமாக மது வாங்கி செல்வது வழக்கமாம். மேலும் ரூ.10 ஆயிரம் மாமூல் தரவேண்டும் என்றும் கேட்டு வந்தாராம். ஆனால் லட்சுமணன் மாமுல் தரமுடியாது. அவ்வப்போது இலவசமாக மதுபாட்டில் வாங்கி செல்கிறீர்கள். அத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.

இந்நிலையில் நேற்று இரவு டாஸ்மாக் கடைக்கு வந்த ஆசைத்தம்பி இதுகுறித்து கேட்டு லட்சுமணனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி தான் எடுத்து வந்த இரும்பு கம்பியால் டாஸ்மாக் மேற்பார்வையாளர் லட்சுமணனை கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்தார்.உடனடியாக அவரை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து லட்சுமணன் பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை டாஸ்மாக் மேற்பார்வையாளர் லட்சுமணனை தாக்கியதாக அமமுக ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News