விருகம்பாக்கத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.60 லட்சம் மோசடி - வாலிபர் கைது
போரூர்:
விருகம்பாக்கம் ஏ.வி.எம். அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சரண் பார்த்திபன். இவர் தனக்கு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பு இருப்பதாகவும் தலைமை செயலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி வந்தார்.
இதனை நம்பி அரசு வேலைக்காக சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரேச பாண்டியன் ரூ.16.½லட்சம், ஹரிகரன் ரூ.7½ லட்சம், லட்சுமிகாந்தன் ரூ.18½லட்சம் கொடுத்தனர்.
பணத்தை பெற்றுக் கொண்ட சரண் பார்த்திபன் இதுவரை யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து சுந்தரேச பாண்டியன் உள்பட 3 பேரும் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர். உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட சரண் பார்த்திபனை கைது செய்தனர்.
அவர் இதேபோல் மேலும் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 60 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. வேறு யாருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.