செய்திகள்

புதுக்கோட்டையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும்- தினகரனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி

Published On 2018-09-18 04:25 GMT   |   Update On 2018-09-18 04:25 GMT
வசைபாடியவர்களின் முகத்திரையை கிழிக்க புதுக்கோட்டையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று தினகரனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். #ADMK #TNMinister #Vijayabaskar #TTVDhinakaran
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் அ.தி. மு.க. சார்பில் கலைவிழா நடந்தது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நலிந்த நாட்டுப்புற கலைஞர்கள் 116 பேருக்கு விருதுகள் மற்றும் தலா ரூ.5 ஆயிரம் பொற்கிழி வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், என்னை வசைபாடியவர்களின் முகத்திரையை ஒரு வார காலத்திற்குள் கிழித்து எறிவேன். அவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன்.

அதற்காக அடுத்த வாரம் புதுக்கோட்டையில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்ட போட்டி பொதுக்கூட்டம் நடத்தப்படும். அதில் பலரின் உண்மையான முகத்திரையை தோலுரித்து காட்டுவேன் என்றார்.


கடந்த 15-ந்தேதி புதுக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அதன் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரை கடுமையாக சாடினார்.

அத்துடன் வருமான வரி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் அவர் சிக்கி தவிப்பதாகவும், அதிலிருந்து தன்னை காப்பாற்றினால் விசுவாசமாக இருப்பேன் என்று தன்னிடம் கூறியதாகவும் பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஒரு வாரத்தில் புதுக்கோட்டையில் கூட்டம் நடத்தப்போவதாக கூறி டி.டி.வி.தினகரனுக்கு சவால் விடுத்துள்ளார். அந்த கூட்டத்தில் தினகரன் குறித்து பல்வேறு விமர்சனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.  #ADMK #TNMinister #Vijayabaskar #TTVDhinakaran

Tags:    

Similar News