செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் வெளியேறும் நேரம் வந்து விட்டது- புகழேந்தி

Published On 2018-09-13 06:50 GMT   |   Update On 2018-09-13 06:50 GMT
எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இருந்த பனிப்போர், தெரு சண்டையாக மாறி, ஓ.பன்னீர்செல்வம் வெளியே வரும் காலம் வந்து விட்டதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். #Pugazhendhi #EdappadiPalaniswami #OPanneerSelvam
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இருந்த பனிப்போர், தெரு சண்டையாக மாறி, ஓ.பன்னீர்செல்வம் வெளியே வரும் காலம் வந்து விட்டது.

தற்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 70 எம்.எல்.ஏ.க்கள், 10 அமைச்சர்கள் உள்ளனர்.


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதனால் அடுத்த முதல்-அமைச்சர் டி.டி.வி. தினகரன் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லாததால், பயிர்கள் கருகி விவசாயிகள் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரும் பணி முறையாக நடைபெறாதது தான்.

தூர்வாரும் பணிக்கான பொறுப்பை எடுத்து கொண்டு அதில் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் விவசாயம் பாதித்து தண்ணீர் கடலில் கலந்தது குறித்து கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கட்சி தலைவர்களும் பேசிக்கொள்கிறார்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வாழ்நாளை சிறையில் கழித்த பேரளறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு, தமிழக கவர்னர் காலம் தாழ்த்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Pugazhendhi #EdappadiPalaniswami #OPanneerSelvam
Tags:    

Similar News