செய்திகள்

ரெயிலில் நகை பறித்து சென்ற வடமாநில வாலிபரிடம் இருந்து 8 பவுன் தங்கம் பறிமுதல்

Published On 2018-09-12 16:21 IST   |   Update On 2018-09-12 16:21:00 IST
ரெயிலில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநிலம் வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம்:

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா, அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 60), இவரது மனைவி ஜெயபத்மாவதி (50). இவர்கள் கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றனர்.

சாமி கும்பிட்டு விட்டு 13-ந் தேதி திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்று கொண்டிருந்தனர்.

ரெயில் திருத்தணி அருகே சென்று கொண்டிருந்தபோது ஜெயபத்மாவதி கழுத்தில் கிடந்த நகையை மர்ம நபர் பறித்து சென்றார். இதுகுறித்து ஜெயபத்மாவதி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட மத்தியபிரதேச மாநிலம், சவுசார் தாலுகா, கைட்டிதைக்கான் கிராமத்தை சேர்ந்த உத்தம்பாட்டீல் (34) என்ற வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் உத்தம்பாட்டீல் அரக்கோணம் அருகே திருத்தணியில் ரெயிலில் வழிப்பறி செய்ததை போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் விசாரணைக்கு பின்னர் உத்தம்பாட்டீலை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வேலூர் சிறையில் இருந்த உத்தம்பாட்டீலிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அரக்கோணம் ரெயில்வே போலீசார் உத்தம்பாட்டீலை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜெயபத்மாவதியிடம் வழிப்பறி செய்ததை தெரிவித்தார். இதையடுத்து உத்தம்பாட்டீல் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் உத்தரபிரதேச மாநிலம், ஷாமிலி மாவட்டம், கான்பூர்காலன் கிராமத்திற்கு சென்று அங்கே உத்தம்பாட்டீல் பதுக்கி வைத்திருந்த உருக்கப்பட்ட 8 பவுன் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News