செய்திகள்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஜன சதாப்தி ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்

Published On 2018-09-06 10:43 GMT   |   Update On 2018-09-06 10:43 GMT
ரெயில் தாமதமாக வருவதை கண்டித்து மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வந்த ஜன சதாப்தி ரெயிலை மறித்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:

தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் கோவை, சிங்காநல்லூர், இருகூர், சோமனூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் தினசரி கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் பாசஞ்சர் ரெயிலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு வரும் பாசஞ்சர் ரெயிலில் திரும்புகின்றனர்.

நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு வரும் பாசஞ்சர் ரெயில் தினசரி இரவு 7.10 மணிக்கு திருப்பூருக்கு வரும். ஆனால் கடந்த சில மாதங்காளாக இந்த ரெயில் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை காலதாமதமாக வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

நேற்று இரவு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாசஞ்சர் ரெயிலுக்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் காத்து இருந்தனர். ஆனால் ரெயில் 9.30 மணிக்கு தான் வரும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வந்த ஜன சதாப்தி ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள், போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு பயணிகள் பாசஞ்சர் ரெயில் தினசரி 2 மணி நேரம் காலதாமதமாக வருகிறது. எனவே நாங்கள் தினசரி பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு இரவு 11 மணி முதல் 12 மணி வரை ஆகிறது எனவும், பாசஞ்சர் ரெயிலை சரியான நேரத்துக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து ரெயில்வே அதிகாரிகள் மயிலாடுதுறையில் இருந்து கோவைக்கு சென்ற ஜனசதாப்தி ரெயிலில் இருகூர், சூலூர், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News