செய்திகள்

திருவண்ணாமலையில் பைக், லாரி மோதல்- பெற்றோர் கண்முன் ஆண் குழந்தை பலியான பரிதாபம்

Published On 2018-09-05 11:08 GMT   |   Update On 2018-09-05 11:08 GMT
திருவண்ணாமலையில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெற்றோர் கண்முன் 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை ஆடையூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகிதா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 2 வயதில் சிவநேசன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று மாலை ரமேஷ் தனது குடும்பத்துடன் மொபட்டில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார். பின்னர் அவர்கள் கடை வீதிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணி அளவில் வீடு திரும்பி உள்ளனர்.

சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகே செல்லும் போது பின்னால் வேகமாக வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் ரமேஷ், சுகிதா மற்றும் பெண் குழந்தை ஒரு புறமும், சிறுவன் சிவநேசன் ஒரு புறமும் விழுந்தனர். குழந்தையின் தலை மீது லாரி ஏறி இறங்கியதில் சிவநேசன் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தில் ரமேஷ், சுகிதா மற்றும் அவர்களது மகள் ஆகியோருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ரமேசும், சுகிதாவும் மகனின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். விபத்து ஏற்படுத்திய லாரி அங்கிருந்து நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குழந்தை சிவநேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் திண்டிவனம் பைபாஸ் சாலையில் மடக்கி பிடித்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News