45 வயதான பெண்களுக்கு ரெயில்களில் 'லோயர் பெர்த்' வசதி - ரெயில்வே அமைச்சர்
- ரெயில் பயணத்தில் கீழ் படுக்கைகள் காலியாக இருந்தால், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியருக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில் ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பான கேள்விக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில்,
* ரெயில் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
* முன்பதிவு செய்யும்போது விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும் முன்னுரிமை அடிப்படையில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகளுக்கு ரெயிலில் லோயர்பெர்த் வழங்கப்படும்.
* மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், கர்ப்பிணியர் ஆகியோருக்கு ரெயிலில் கீழ் படுக்கை வசதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* இதற்காக, ஸ்லீப்பர் வகுப்பில், ஒரு பெட்டிக்கு ஆறு முதல் ஏழு பெர்த்களும், மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் நான்கு முதல் ஐந்து பெர்த்களும், இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் மூன்று முதல் நான்கு பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
* ராஜ்தானி, சதாப்தி உட்பட அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு சிறப்பு முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* ஸ்லீப்பர், மூன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டிகளில் தலா நான்கு பெர்த்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ரெயில் பயணத்தில் கீழ் படுக்கைகள் காலியாக இருந்தால், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியருக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில் ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* அகலமான கதவுகள், அகலமான பெர்த்கள், சக்கர நாற்காலியை நிறுத்தும் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறைகளும் அவர்களுக்கு தகுந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன.
* பார்வை குறைபாடு உள்ள பயணியர் வசதிக்காக, 'ப்ரெய்லி' எழுத்துகளுடன் கூடிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நவீன அம்ரித் பாரத் மற்றும் வந்தே பாரத் ரெயில்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.