செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் தங்கம் சிக்கியது

Published On 2018-09-03 03:32 GMT   |   Update On 2018-09-03 03:32 GMT
சென்னை விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அயூப்கானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அயூப்கான் (வயது 32) என்பவர் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்தார்.

அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அயூப்கானை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவரிடம் இருந்த சூட்கேசில் பெண்கள் அணியும் மேலாடையில் தங்க துண்டுகள் வைத்து தைக்கப்பட்டு இருந்ததையும், சமையல் பொருட்களிலும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபற்றி அயூப்கானிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அழைத்து செல்ல விமான நிலையம் வந்திருந்த முஸ்தபா (37) என்பவரிடமும் இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News