செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் பதவி வெறியில் மனநிலை பாதித்தவர் போல் பேசுகிறார்- தினகரன் ஆவேச பேட்டி

Published On 2018-09-02 09:56 GMT   |   Update On 2018-09-02 10:37 GMT
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதவி வெறியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் என்று தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #dinakaran #OPanneerselvam

தஞ்சாவூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ‘‘ முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தினகரன் முதல்வராக சதி செய்தார். என்று கூறினார்.

தினகரனின் சொந்த ஊரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தஞ்சையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். அவர் பேசுவது எல்லாம் உண்மையல்ல என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். பதவி வெறியில் இவ்வாறு பேசுகிறார்.

தி,மு.க.வுடன் கைக் கோர்த்து கொண்டே இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். பின்னர் டெல்லியில் இருந்து உத்தரவு வந்தவுடன் இந்த ஊழல் ஆட்சியுடன் சேர்ந்து கொண்டு ‘துணை முதல்வர்’ பதவியை வகிக்கிறார். அவரது நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. என்னை சதி செய்தார் என்று கூறுகிறார். இதை யாரும் நம்ப மாட்டார்கள். அவரது மனைவி கூட நம்ப மாட்டார். ஓ.பி.எஸ். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என்னை தெரியும். விரக்தியில் உள்ள ஓ.பி.எஸ். மனநிலை பாதித்தவர் போல் பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் குறுக்கிட்டு, ‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி முக்கொம்பு அணையை பார்வையிடும் நேரத்தில் நீங்களும் சுற்றுப்பயணம் செல்கிறீர்களே? என்றனர்.

இதற்கு தினகரன் பதிலளித்து பேசும் போது, ஸ்டாலின் சுற்றுப்பயணம் பற்றி எனக்கு தெரியாது. கடைமடை பகுதிவரை தண்ணீர் இல்லாததால் ஆகஸ்ட் 19-ந் தேதி நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து விட்டோம். அதன்படி இன்று மாலை நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

கடைமடைக்கு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூர்வாரும் பணியில் சுமார் ரூ.400 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

காவிரி வெற்றி விழா பொதுக்கூட்டம் என்று கூத்து நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின் போது மாநில பொருளாளர் ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #dinakaran #OPanneerselvam

Tags:    

Similar News