செய்திகள்

துபாயில் இருந்து சென்னைக்கு ஜீன்ஸ்பேண்ட்டில் வளையமாக தொங்கவிட்டு தங்கம் கடத்தல் - 2 பேர் கைது

Published On 2018-08-30 07:07 GMT   |   Update On 2018-08-30 07:07 GMT
துபாயில் இருந்து சென்னைக்கு ஜீன்ஸ்பேண்ட்டில் வளையமாக தொங்கவிட்டு தங்கம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldsmuggling

ஆலந்தூர்:

துபாயில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர்கள் ஷாஜகான், இஸ்மாயில் ஆகியோரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அணிந்து இருந்த ‘ஜீன்ஸ்’ பேண்ட்டில் வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக டிசைன் வளையங்கள் தொங்கின.

அதனை சோதனை செய்தபோது தங்கம் என்பது தெரிந்தது. 2 பேரின் ஜீன்ஸ் பேண்ட்டில் இருந்து 300 கிராம் தங்க வளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த ஷாஜகான், இஸ்மாயிலிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைப்பையில் மறைத்து வைத்து 337 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம். அதனை பறிமுதல் செய்து மலேசியா பெண்ணிடம் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News