செய்திகள்

காதலியுடன் ஏற்பாடு செய்த திருமணத்தை தள்ளி வைத்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2018-08-22 10:30 GMT   |   Update On 2018-08-22 10:30 GMT
காதலியுடன் ஏற்பாடு செய்த திருமணத்தை தள்ளி வைத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் பிள்ளையார் குப்பம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 28). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு லாஸ்பேட்டையில் தற்காப்பு கலை பயிற்சி, நடன வகுப்பு நடத்தி வருகிறார்.

இவர் முத்தியால் பேட்டையில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் இவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இருவர் வீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் பெண் வீட்டில் சில வருடம் கழித்து திருமணம் செய்யலாம் என கூறி அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தினர். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த ராமதாஸ் சில நாட்கள் வீட்டுக்கு செல்லாமல் பயிற்சி மையத்திலேயே தங்கினார்.

நேற்று வீட்டுக்கு வந்த ராமதாஸ் உடனே கிளம்பினார். அவரது சித்தப்பா புகழேந்தி (52) ஏன் உடனே செல்கிறாய்? என கேட்டார்.

அதற்கு பதில் சொல்லாமல் பயிற்சி மையத்துக்கு சென்று சித்தப்பாவுக்கு போன் செய்தார். எதுவும் பேசாமல் வைத்து விட்டார்.

அவரது சித்தப்பா மீண்டும் போன் செய்து பார்த்தார். மறுமுனையில் போனை எடுக்கவில்லை. எனவே, சந்தேகத்தில் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கு ராமதாஸ் மின் விசிறி கொக்கியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ராமதாஸ் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், எனது சாவுக்கு நான் தான் காரணம். எனக்கு வாழ பிடிக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News