செய்திகள்

துரைப்பாக்கத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-08-11 22:14 GMT   |   Update On 2018-08-11 22:14 GMT
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்றபட்ட தகராறு காரணமாக கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் வெங்கடாசலபதி. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. ராஜகுமாரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். வெங்கடாசலபதி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த ராஜகுமாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த வெங்கடசலாபதி, ராஜகுமாரியின் உடலை கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கண்ணகி நகர் போலீசார் விரைந்து சென்று ராஜகுமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராஜகுமாரி சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News