செய்திகள்

தஞ்சை புது ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2018-08-09 13:26 GMT   |   Update On 2018-08-09 13:26 GMT
தஞ்சை புது ஆற்றில் நண்பர்களுடன் குளித்த வாலிபர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். வாலிபர் இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சை மானம்புசாவடி ஆடக்கார தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 25). இவருக்கு கோகிலா என்ற மனைவியும், நிக்சன் என்ற 3 வயது குழந்தையும் உள்ளது. ஸ்டீபன்ராஜ், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தெருவில் உள்ள ஒரு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் வேலைப் பார்த்து வந்தார்.

நேற்று காலை ஸ்டீபன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பட்டுக்கோட்டை - விளார் புறவழிச்சாலையில் உள்ள புது ஆற்றங்கரையில் குளிக்க சென்றனர். பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி உற்சாக குளியலில் ஈடுபட்டிருந்தனர். தண்ணீர் அதிகமாக இருந்ததால் சிறிது நேரத்திற்கு பின்னர் ஸ்டீபன் ராஜால் நீந்த முடியவில்லை. அப்போது அவரது நண்பர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் என்று ஸ்டீபன் ராஜை அழைத்துள்ளனர். ஆனால் அவரால் கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் மூழ்கினார். 

இதைத் தொடர்ந்து ஸ்டீபன்ராஜ் நண்பர்கள் அவரை ஆற்றில் இறங்கி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து தஞ்சை தாலுகா போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். போலீசாரும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய ஸ்டீபன் ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நெய்வாய்க்கால் அருகே ஸ்டீபன்ராஜ் உடல் கரை ஒதுங்கியது. அங்கு சென்று போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புது ஆற்றில் குளிக்க சென்ற போது வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News