செய்திகள்

சின்னசேலம் அருகே ரெயில் விபத்தில் காயமடைந்த சுகாதார ஆய்வாளர் சாவு

Published On 2018-08-09 11:50 GMT   |   Update On 2018-08-09 11:50 GMT
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னசேலம்:

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே நயினார்பாளையத்தை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது 54). இவர் கடலூர் கோண்டூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி சித்ரா(40), இவர்களது மகன் மகேஸ்வரன்.

வெற்றிவேல் கடலூர் மேல்பட்டாம்பாக்கத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் மனைவி சித்ரா, மகன் மகேஸ்வரன், உறவினர் காவியா(22) ஆகியோருடன் ஒரு காரில் பெரியசிறுவத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்பு அவர்கள் வீடு திரும்பினர்.

அப்போது சின்ன சேலம்-சிறுவத்தூர் இடையே ஆளில்லா ரெயில்வேகேட்டை கார் கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரெயில் கார் மீது மோதியது. இதில் சித்ரா, காவியா ஆகியோர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில் வெற்றி வேல், மகேஸ்வரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் வெற்றி வேல் இறந்தார். மகன் மகேஸ்வரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News