செய்திகள்
காவேரி மருத்துவமனையில் குவியும் தொண்டர்கள் ‘எழுந்து வா தலைவா’ என முழக்கம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து சிறிது கவலை அளிக்கும் வகையில் அறிக்கை வெளியானதை அடுத்து, மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள 6-வது அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மருத்துவ அறிக்கையால் கவலை அடைந்துள்ள திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு வெளியே குவிந்து வருகின்றனர். ‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.