மடுகரையில் ஜவுளிக்கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்- வாலிபர் கைது
சேதராப்பட்டு:
புதுவை மடுகரையை அடுத்த தமிழக பகுதியான சிறுவந்தாடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). இவர், அங்குள்ள பட்டு புடவை ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மடுகரை பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்த போது, இவருக்கும், மடுகரையை சேர்ந்த உமாநாத் (31) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மூர்த்தி மடுகரை சிவன் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது உமாநாத் மற்றும் அவரது நண்பர் ஆனந்த பாஸ்கர் ஆகிய இருவரும் சேர்ந்து மூர்த்தியை வழிமடக்கி தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து மூர்த்தி மடுகரை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து உமாநாத்தை கைது செய்தார். அவரது நண்பர் ஆனந்த பாஸ்கரை தேடி வருகிறார்.