செய்திகள்

கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-07-24 16:31 GMT   |   Update On 2018-07-24 16:31 GMT
கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Student #Roadblock
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சியில் ஸ்ரீபுரந்தான், சுத்தமல்லி, காரைக் குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் கும்பகோணத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர் வழியாக கும்பகோணத்திற்கு செல்லும் பஸ்சில் பயணம் செய்து படித்து வந்தனர். ஆனால் இந்த பஸ் உரிய நேரத்தில் வருவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலையிலும் பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவர்கள் தா.பழூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தா.பழூர் பஸ் நிலையம் முன்பு ஜெயங்கொண்டம்-கும்ப கோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:- இந்த வழியாக கும்பகோணத்திற்கு 1 மணி நேரத்திற்கு ஒரு பஸ்சும், 1½ மணி நேரத்திற்கு ஒரு பஸ்சும் வந்து செல்கின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தாமதமாக செல்கின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் தாமதமாக செல்வதால் ஆசிரியரிடம் திட்டுவாங்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுடன், எங்களது படிப்பும் பாதிக்கின்றது. எனவே இந்த பகுதியில் கும்பகோணம் செல்வதற்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தையில் போலீசார் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News