செய்திகள்

பெருந்துறை அருகே புதுப்பெண் மர்ம மரணம்

Published On 2018-07-21 10:23 GMT   |   Update On 2018-07-21 10:23 GMT
பெருந்துறை அருகே திருமணம் ஆன 2 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெருந்துறை:

பெருந்துறை அருகே உள்ள காடபாளையத்தை சேர்ந்தவர் தமீன் அன்சாரி. இவரது மனைவி யாஸ்மின் (வயது 24).

இவர்கள் 2 பேரும் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர்கள். இருவரும் காதல் செய்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பை மீறி அவர்கள் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்தனர். பின்னர் அவர்கள் பெருந்துறைக்கு வந்து காடபாளையத்தில் தங்கி இருந்து குடும்பம் நடத்தினர்.

தமீன் அன்சாரி செல்போன் கடையிலும், யாஸ்மின் செருப்பு கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலூரில் உள்ள யாஸ்மினின் தாய்க்கு தமீன் அன்சாரி போன் செய்தார். ‘‘உங்கள் மகள் அதிக வயிற்று வலியால் எலி மருந்து சாப்பிட்டு விட்டார். நான் பெருந்துறை ஐ.ஆர்.டி. ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளேன்’’ என்று கூறினார்.

இதையடுத்து யாஸ்மினின் தாயார் மேலூரில் இருந்து பெருந்துறைக்கு வந்தார். யாஸ்மினை கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி யாஸ்மின் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீஸ் டி.எஸ்.பி. ராஜகுமார் வழக்குப்பதிவு செய்தார்.

யாஸ்மின் மர்மமாக இறந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. யாஸ்மினுக்கு திருமணமாகி 2 மாதமே ஆவதால் அவரது சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News