செய்திகள்

விபத்தில் போக்குவரத்து ஊழியர் பலி - நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி

Published On 2018-07-18 12:05 GMT   |   Update On 2018-07-18 12:05 GMT
அரசு பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியருக்கு கோர்ட் உத்தரவிட்டும் நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை, நேதாஜிவீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். ஈரோடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவசுந்தரி.

கடந்த 10.6.2005-ம் ஆண்டு ஜெயபிரகாஷ் தனது மோட்டார்சைக்கிளில் பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

வில்லரசம்பட்டி அருகே வந்தபோது ஜெயபிரகாசுக்கு பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயபிரகாஷ் இறந்துவிட்டார்.

இது தொடர்பாக ஜெயபிரகாஷ் குடும்பத்தினர் ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழங்க கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 5 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால் இந்த தொகை போதாது என்று அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதி ரூ.16 லட்சம் வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.

ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் ஜெயபிரகாஷ் மனைவி தேவசுந்தரி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் வட்டியுடன் ரூ.20 லட்சத்து 20 ஆயிரத்து 9 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து இன்று கோர்ட்டு ஊழியர்கள் ஈரோடு பஸ் நிலையத்துக்கு வந்து ஈரோடு-கோவை செல்லும் அரசு பஸ், கோவை-ஆத்தூர் செல்லும் அரசு பஸ் என 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.
Tags:    

Similar News