செய்திகள்
போலீசார் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகள்.

சாலையோரமாக நின்று பாலியலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை- திருநங்கைகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

Published On 2018-07-17 09:59 GMT   |   Update On 2018-07-17 09:59 GMT
சாலையோரமாக நின்று பாலியல் தொழிலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநங்கைகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:

நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் ரோடு மற்றும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் இரவு நேரங்களில் திருநங்கைகள் சாலையோரமாக அணி வகுத்து நிற்பார்கள்.

அப்போது அந்த வழியாக கார், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை அவர்கள் பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இதனை கட்டுப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து இணை ஆணையர் அன்பு மேற்பார்வையில் திருநங்கைகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

சூளைமேடு பஜனை கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் செல்வநாகரத்தினம், நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சுமார் 100 திருநங்கைகள் கலந்து கொண்டனர். அப்போது சாலையோரமாக நின்று பாலியல் தொழிலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதற்கு மாற்றாக உங்களுக்கு வேறு வேலை வாங்கி தருகிறோம் என்று திருநங்கைகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.

அழகு கலை நிபுணராக, ஓட்டல் வரவேற்பாளராக வேலை வாங்கி தருவதற்கு தயாராக இருப்பதாக துணை கமி‌ஷனர் செல்வ நாகரத்தினம் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட திருநங்கைகள் ஒன்று கூடி பேசி முடிவெடுப்பதாக கூறினர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகளில் பலர் என்ஜினீயரிங் முடித்திருந்தனர். எம்.பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., பி.எஸ்.சி., டிப்ளமோ படிப்புகளை முடித்துள்ளனர். இவர்களில் பலர் நிறுவனங்களில் வேலையும் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக 15 நாள் கழித்து மீண்டும் ஒரு கூட்டம் நடத்துவதற்கும் போலீசார் முடிவு செய்துள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News