திண்டுக்கல் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்
சின்னாளபட்டி:
குமுளியில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. வத்தலக்குண்டு- செம்பட்டி ரோட்டில் வீரசிக்கம்பட்டி என்ற இடத்தில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரம் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கூச்சலிட்டனர்.
இந்த விபத்தில் டிரைவர் திருச்சியை சேர்ந்த சார்லஸ் (வயது29), கண்டக்டரான கூடலூரை சேர்ந்த கார்த்திக் (28), பஸ்சில் பயணம் செய்த தேனியை சேர்ந்த பாலநாராயணன் (24), எரசக்கநாயக்கனூரை சேர்ந்த சதீஷ்குமார் (23) ஆகிய 4 பேர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மற்ற பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மாற்று பஸ் மூலம் திண்டுக்கல் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சென்னை சென்றனர்.
இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.