ஏரியில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு - லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபோர் ஏரியில் சவுடி மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 27-ந் தேதி மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தீர்வு ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை ஏரியில் மணல் அள்ளுவதற்காக 50-க்கும் மேற்பட்ட லாரிகள் அணி வகுத்து வந்தன. இதனை அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஏரியில் திரண்டனர்.
அவர்கள் லாரிகளை சிறைபிடித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. சந்திரதாசன், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மணல் குவாரி தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க கிராம மக்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். அவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மணல் குவாரிக்கு எதிராக மனு கொடுக்க முடிவு செய்து உள்ளனர். #Tamilnews