பேரையூர் அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலஉப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது27). 8-ம் வகுப்பு படித்துள்ள இவர் கட்டிட வேலைபார்த்து வந்தார்.
இவருக்கும், மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கருப்பு மகள் சித்ரா (23) என்பவருக்கும் கடந்த மாதம் 25-ந்தேதி திருமணம் நடந்தது. சித்ராதேவி பட்டப் படிப்பு முடித்துள்ளார்.
திருமணமான நாளில் இருந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுறது. இதனால் ரஞ்சித்குமார் கடந்த சில வாரமாகவே விரக்தியுடன் காணப்பட்டார். வேலைக்கும் சரியாக செல்லவில்லை.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரஞ்சித்குமார் விஷம் குடித்துவிட்டு பரமக்குடிக்கு அரசு பஸ் சில் சென்றார். பஸ்சில் மயங்கி கிடந்த அவரை சக பயணிகள் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.