செய்திகள்

மீன்பிடி படகுகளை மீனவர்களுக்கு கட்டி கொடுக்க வேண்டும்- மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

Published On 2018-06-25 07:35 IST   |   Update On 2018-06-25 07:35:00 IST
ஆழ்கடல் மீன்பிடி படகுகளை மத்திய அரசே மீனவர்களுக்கு கட்டி கொடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். #Vaiko
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை கடற்படை உள்ளிட்ட பிரச்சினைகளில் துன்பப்படும் பாக் சலசந்தி மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடித்தலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் 2016-ல் ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2017-ல் அப்துல் கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழாவிற்கு ராமேசுவரம் வருகை தந்த பிரதமர் மோடியால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தத்திட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க வசதியாக ரூ.80 லட்சம் மதிப்பில் படகும், பரப்பு வலையும், தூண்டில், மீன்பிடி உபகரணங்கள் கொடுக்கப்படும் என்றும், திட்ட மதிப்பில் 50 சதவீத பணம் மத்திய அரசின் மானியமாகவும், 20 சதவீதம் மாநில அரசு மானியமாகவும், 20 சதவீதம் வங்கி கடனாகவும், 10 சதவீதம் மீனவர்கள் பங்களிப்பாகவும் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீனவர்கள் இந்த திட்டத்தை செயல் படுத்த முனைப்புக்காட்டிய நிலையில், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எட்டா கனியாக பாரம்பரிய மீனவர்களுக்குத் தெரிகிறது.

இப்போதுள்ள நிலவரத்தின்படி மீன்பிடி உபகரணங்கள் தவிர்த்து படகு மற்றும் என்ஜின் உள்ளிட்டவைகள் மட்டுமே அரசின் திட்ட மதிப்பீடான 80 லட்சத்தில் செய்து தருவதாக படகு தயாரிக்கும் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே மீன்பிடி வலைகளும், சாதனங்களும் மீனவர்களே சொந்தப் பணத்தில் வாங்கவேண்டிய நிலையில் உள்ளனர்.



எனவே இந்தத் திட்ட மதிப்பினை ரூ.1 கோடியே 10 லட்சமாக உயர்த்த வேண்டும் அல்லது இந்திய-நார்வே மீன்பிடி திட்டத்தில் கொடுத்தது போல அரசே ஆழ்கடல் மீன்பிடி படகினைக் கட்டி மீனவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #Vaiko
Tags:    

Similar News