செய்திகள்

பனப்பாக்கம் அருகே அரசு பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலி

Published On 2018-06-24 21:42 IST   |   Update On 2018-06-24 21:42:00 IST
பனப்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு விரைவு பஸ் மோதி 2 விசைத்தறி தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
பனப்பாக்கம்:

பனப்பாக்கம் பெரிய தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 44), இவருடைய மனைவி மாலினி (33). இவர்களுக்கு சன்மதி என்ற மகளும், சர்வேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். பனப்பாக்கம் கீழ்ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சுரேந்தர் (30), இவருக்கு திருமணமாகவில்லை. பாஸ்கரனும், சுரேந்தரும் விசைத்தறி தொழிலாளர்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாஸ்கரன் பெரும்புலிபாக்கத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட சுரேந்தரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பெரும்புலிபாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது ஓசூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாஸ்கர் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுரேந்தர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஒரே பகுதியை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News