செய்திகள்

திருப்புவனம் அருகே கிரைண்டர் கல்லை போட்டு பெண் கொடூரக்கொலை - மகன் வெறிச்செயல்

Published On 2018-06-19 05:29 GMT   |   Update On 2018-06-19 05:29 GMT
கிரைண்டர் கல்லை போட்டு தாயை கொடூரமாக கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மனைவி சீனியம்மாள் (வயது 55). இவர்களுக்கு சரவணன் (36), முருகன் என 2 மகன்கள் உள்ளனர்.

டிரைவரான சரவணனுக்கு திருமணமாகி பாலா மணி என்ற மனைவி உள்ளார். அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் சரவணன் தகராறு செய்தார். இதனால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் முருகனுக்கு பெண் பார்க்க ஏற்பாடுகள் நடந்தன. இதையொட்டி சீனியம்மாள், சரவணனிடம் உனது மனைவியை சமரசம் செய்து வீட்டுக்கு அழைத்து வா என கூறினார். இதற்கு அவர் மறுத்து விட்டார். இதுதொடர்பாக தாய்-மகனுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று சரவணன் வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். போதையில் இருந்த அவரிடம் மீண்டும் சீனியம்மாள் மருமகள் குறித்து கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், தாய் என்றும் பாராமல் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சீனியம்மாள் மீது போட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புவனம் போலீசார் சம்பவ இடம் சென்று சீனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணனை கைது செய்தனர்.

போதையில் தாயை மகனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News