செய்திகள்

ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோடும் தினகரன் அணி- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு

Published On 2018-06-19 04:04 GMT   |   Update On 2018-06-19 04:04 GMT
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் பங்கு போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டனர். இதனால் பதவி ஆசை காட்டி 18 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் அவர் இழுத்துக் கொண்டார். ஆனால் அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் ஸ்டாலினை முதல்வராகவும், தினகரனை துணை முதல்வராகவும் உருவாக்க திட்டம் தீட்டினர்.

அதுவும் நிறைவேறவில்லை. இதனால் சபாநயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தார். ஆனால் எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்து விட வேண்டும் என டி.டி.வி. தினகரன் மற்றும் ஸ்டாலின் துடித்து வருகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன் வியர்வை, ரத்தம், பணம் ஆகியவற்றை கொடுத்து எங்கள் அனைவரையும் எம்.எல்.ஏ. ஆக்கினார். அதே போல்தான் தற்போது டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 பேரும் எம்.எல்.ஏ.க்களாக ஜெயலலிதா தயவால் உருவாக்கப்பட்டனர்.



ஆனால் அவரது மறைவுக்கு பின் ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களும் பெற்றுக் கொண்டு தற்போது மக்களை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப்பற்றி பேசிய இந்த சர்ச்சை பேச்சால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் வியப்புடன் அமைச்சரை பார்த்துக் கொண்டிருந்தபோதே அவர் வேறு தலைப்பில் பேச்சைத் தொடங்கினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
Tags:    

Similar News