செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 தொழிலாளிகள் உடல் கருகினர்

Published On 2018-06-15 08:30 GMT   |   Update On 2018-06-15 08:30 GMT
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகிய 4 தொழிலாளிகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை அடுத்துள்ள காளையார் குறிச்சி கிராமத்தில் கனகபிரபு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் ராக்கெட் வெடிக்கு மருந்து நிரப்பும் பணி நடைபெற்று வந்தது.

அப்போது மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு வெடிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ அறை முழுவதும் பரவியது. அங்கிருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த தொழிலாளர்கள் திருத்தங்கலைச் சேர்ந்த ராமசாமி (வயது 67), சுக்கிரவார்பட்டி மாரி பாண்டி (47), காளையார் குறிச்சி முருகேசன் (47), எரிச்சநத்தம் அழகுபாண்டி (26) ஆகிய 4 பேர் உடல் கருகினர்.

தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மற்றும் எம்.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டனர். 90 சதவீதத்திற்கும் மேல் காயமடைந்த இவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News